அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவருக்கும், சோனியா காந்திக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று பிரதமரின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்சய் பாரு கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிவுறும் தருவாயில் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் பிரத்மரின் நிலை குறித்து அவர் அளித்துள்ள பேட்டி காங்கிரஸ் கட்சியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவரிடம் அரசியலை, அரசைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று கூறியுள்ளார் பாரு.
பாருவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இது மிகவும் கண்டனத்தக்குரிய பேச்சு. உண்மையில் மிகவும் திறமையாக செயல்பட்ட காரணத்தால்தான் இன்று 2வது முறையாக பிரதமராக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அவரது திறமைக்கு இதுவே சரியான சான்றாகும்.
காங்கிரஸ் தலைவருக்கும், பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அப்படி எதுவுமே இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications