ப.சிதம்பரம் விலகுவார் என காத்திருக்காமல் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- பாஜக
தேவகோட்டை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகுவார் என பிரதமர் மன்மோகன் சிங் காத்திருக்கக் கூடாது. மாறாக அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தயாநிதி மாறன், 2ஜி பிரச்னையில் மிகவும் காலதாமதமாக ராஜினாமா செய்து உள்ளார். சி.பி.ஐ.,யும், குற்றம் சாட்டி அறிக்கை தாக்கல் செய்ததால், வேறு வழியில்லாமல் வெளியேறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது என்பதையே இது காட்டுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விலையை நிதி அமைச்சகத்தில் அதிகாரமுள்ள அமைச்சர் குழு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என நிதி அமைச்சகம் தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், இறுதியில் தொலை தொடர்பு விலை நிர்ணயம் செய்ததற்கு அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டதோடு, இந்த விஷயத்தை முடிந்து போனதாக கருதுவோம் என பிரதமருக்கு 2008ல் கடிதம் எழுதுகிறார்.
அவரது நிலைப்பாடு பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இதுகுறித்து சிபிஐ அடுத்த முறை அறிக்கை தாக்கல் செய்யும் வரை காத்திருப்போம் என்று எதிர்பார்க்காமல், ப.சிதம்பரம் அவராகவே விலகுவார் என்று காத்திருக்காமல், பிரதமரே உடனடியாக ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்.
காமன்வெல்த் போட்டிகளில் அனாவசிய செலவு தடுக்கப்படவேண்டுமென தானே கடிதம் எழுதியும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம்
கேட்கவில்லை என அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே காமன்வெல்த் போட்டி ஊழலுக்கும் சிதம்பரம் காரணமாக இருந்துள்ளார். கிருஷ்ணா கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்தலிலும், சிதம்பரம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக இருந்திருக்கிறார்.
இப்படி 7 ஆண்டுகளில் நிதி மோசடி தொடர்பானவைகளில் சிதம்பரம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சராக அவர் தொடர்வது நியாயமில்லை என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications