இடஒதுக்கீடு: ஜெயலலிதாவிடம் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் அறிக்கை
சென்னை: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மண்டல் கமிஷன் குழு வழக்குகள் தொடர்பாக, 6.11.1992ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. மொத்த ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்துக்கு மேல் மிஞ்சக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
எனவே, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டினை நிலை நிறுத்தவும், தொடர்ந்து செயல்படுத்தவும் ஏதுவாகவும் 1993ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவை 31.12.1993 அன்று தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றியது.
இது ஜனாதிபதியின் ஒப்புதலோடு சட்டமாகியது. பின்னர் இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் 9வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
இந்த சட்டத்தின் செல்லும் தன்மையினை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகள் தொடர்பாக 13.7.2010 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில், ஒரு மாநிலம் 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மேல் செல்ல விரும்பினால், அத்தகைய முடிவு, எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின்படி அமைய வேண்டும் என்றும், எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
மேலும், அந்த விவரங்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவினை ஓராண்டிற்குள் ஆணையம் தீர்மானிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து வளமான பிரிவினரை' (க்ரீமி லேயர்) நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 3.1.2011 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 13.7.10 தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட காலவரையறைக்குள் இப்பொருள் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பின் மீது ஆய்வு நடத்த வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, பல்வேறு விவரங்கள் திரட்டப்பட்டு ஆணையத்திற்கு அளிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவு, வளமான பிரிவு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அந்த அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் வழங்கினார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications