கட்சி கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார் குமாரசாமி

குமாரசாமி மற்றும் அவரது தந்தை தேவெ கெளடா மற்றும் குடும்பத்தினர் கிட்டத்தட்ட ரூ. ஆயிரத்து 500 கோடி அளவுக்கு சொத்துக்களைக் குவித்துள்ளதாக முதல்வர் எதியூரப்பா புகார் கூறியிருந்தார். மேலும் பாஜகவும் இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் கூறி வந்தது.
இதனால் கோபமடைந்த குமாரசாமி இந்தப் புகார்களை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் இதை எதியூரப்பா கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சிபிஐ விசாரணை விடாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் குமாரசாமி.
இந்த நிலையில் தான் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று காலை பெங்களூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள், முன்னணித் தலைவர்களுடன் பெங்களூர் சுதந்திர பூங்காவில் குமாரசாமி தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில் அவரை உண்ணாவிரதத்தை கைவிடக் கோரி முதல்வர் எதியூரப்பா இன்று காலை 3 அமைச்சர்களை தூது அனுப்பினார். ஆனால் அவர் கோரிக்கையை குமாரசாமி நிராகரித்தார். உண்ணாவிரதத்தால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே ஹெச்.டி. தேவெ கௌடா தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமியை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. கட்சியின் முடிவை ஏற்று குமாரசாமி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.
பிரபல கன்னட எழுத்தாளர் யூ. ஆர். அனந்தமூர்த்தி அவருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications