அசாமில் ரயில் மீது குண்டுவீசி தாக்குதல்: 100 பேர் காயம்- 4 பெட்டிகள் தடம்புரண்டன
குவாஹாத்தி: நேற்றிரவு அசாமில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பயணிகள் ரயில் பலத்த சேதம் அடைந்தது. இதில் குறைந்தது 100 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
குவாஹாத்தி-பூரி எக்ஸ்பிரஸ் ரயில் வடக்கு அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள கோக்ரபாரா அருகில் சென்று கொண்டிருக்கையில் தான் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இது குவாஹாத்தியில் இருந்து 70 கிமீ தொலைவில் தான் நடந்தது. நேற்றிரவு 8.30 மணிக்கு இந்த குண்டுவெடிப்பு நடந்தது என்றார்.
இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 4 பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர்.
குண்டுவெடிப்பை நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட வயர்கள் உள்ளிட்ட பொருட்களை சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றியதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ரயில் குவாஹாட்டியில் இருந்து ஒரிசா மாநிலம் பூரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அந்த ரயிலில் பயணித்த ஜித்தேன் தாஸ் கூறுகையில்,
பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதன் பிறகு ஒரே கூச்சல், குழப்பமுமாக இருந்தது. நான் பயணம் செய்த பெட்டி தடம்புரண்டு இடுப்பு அளவு தண்ணீர் உள்ள சதுப்பு நிலத்தில் விழுந்தது. எப்படியோ நாங்கள் பெட்டியை விட்டு வெளியேறினோம். எனக்கு தலை, கைகள் மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டன என்றார்.
4 பெட்டிகள் தடம்புரண்டன. அதில் ஒரு பெட்டி மட்டும் சுமார் 20 மீட்டர் வரைச் சென்ற பிறகே நின்றது என்று காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த உள்ளூர் வாசி தன்மோனி தாஸ் தெரிவித்தார்.
நாங்கள் குறைந்தது 100 பேரையாவது காப்பாற்றியிருப்போம். அவர்களை சைக்கிள், பைக் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம அருகில் உள்ள மருத்துவமனைகளைக்கு கொண்டு சென்றோம் என்று ருபுலி அலி என்னும் உள்ளூர் வாசி தெரிவித்தார்.
படுகாயம் அடைந்தவர்கள் குவாஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்த பயணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மீட்பு ரயில் சம்பவ இடத்தை சென்றடைந்தது. இந்த பகுதியில் உல்பா மற்றும் போடோலேண்ட் தேசிய ஜனநாயக முன்னணி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டுவெடிப்பால் அசாமில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தண்டவாளம் சரிசெய்யும் வரை, ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று மதியம் தான் உத்தர பிரதேசத்தில் கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு 53 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications