சேலத்தில் 6 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட வீட்டில் திடீர் தீ- போலீஸார் விசாரணை
சேலம்: சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் தாசநாயக்கன் பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ். மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.இது தொடர்பாக குப்புராஜின் மகன் சிவகுரு கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினரான சுரேஷ் குமார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சேலம் 4வது நீதித்துறை நடுவர் மன்றத்தி்ல 1000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சிவகுரு, அவரதுமகன் உள்பட அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர். இந்த நிலையில்,சம்பந்தப்பட்ட வீட்டின் ஒரு பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
குப்புராஜ் கொல்லப்பட்ட அறையில்தான் தீவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்து ஒரு பீரோ தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமாகி விட்டது. அந்த வீட்டில் தற்போது மின்சார இணைப்பு இல்லை. கொலை நடந்ததுமே அது துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே யாரோ சிலர்தான் தீவைத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
முக்கியத் தடயங்கள் எதையாவது அழிப்பதற்காக இந்த நாச வேலையில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. மயில்வாகணன் உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி போலீஸாரும் விசாரணை நடத்தவுள்ளனர்.
இந்த திடீர் தீ குறித்து குப்புராஜின் மகள் விஜயலட்சுமி கூறுகையில்,
எங்கள் குடும்பத்தார் கொலை செய்யப்பட்ட பிறகு நாங்கள் வாழ்ந்த வீட்டிற்கு வந்து பார்த்து நினைத்து, நினைத்து அழுவேன். வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எங்களது லாரியில் உதிரிபாகங்கள் திருடப்பட்டு இருந்தது. அது குறித்து புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகில் இருந்த வயல் வெளி தீ பற்றி எரிந்தது. அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது வீட்டை எரித்துள்ளனர். அடுத்து எங்களை தான் எரிப்பார்கள்.
முன்பு நடைபெற்ற விசாரணையின் போது அதிகாரத்தை பயன்படுத்தி தவறான முறையில் கொண்டு சென்று விட்டனர். இதனால் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளேன். தற்போது விசாரணை நடத்தினால் எங்கே செய்த குற்றங்கள் வெளிப்பட்டு விடுமோ என்று கருதி சிலர் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications