அஜ்மல் கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும்-பிட்டா கோரிக்கை
டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார் தீவிரவாதத் தடுப்பு முன்னணி அமைப்பின் தலைவரான எம்.எஸ்.பிட்டா.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பிட்டா. இவரைக் கொல்ல மூன்று முறை குண்டு வீசப்பட்டது. அதிலிருந்து தப்பினார் பிட்டா. 1993ம் ஆண்டு இவர் பயணித்த கார் மீது குண்டு வீசினர் காலிஸ்தான் போராளிகள். அதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பிட்டாவின் கால் துண்டிக்கப்பட்டது. அன்று முதல் இவர் தீவிரவாத எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
கசாபின் மரண தண்டனையை நிறைவேற்றினால் அதன்பிறகு சமீபத்திய மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களைப் போல எப்போதும் நடக்காது.
உயர்நீதிமன்றம் முடிவு செய்த பின்னர் அவரை தூக்கிலிட்டிருந்தால் புதன்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.
கார்கில் போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆன பின்னரும் அதிலிருந்து அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அப்படி பாடம் கற்றுக் கொண்டிருந்தால் மும்பை குண்டுவெடிப்புகள் நடந்திருக்காது.
பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்களுடன் சில அரசியல்வாதிகள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை அரசியல்வாதிகள் புறக்கணிக்க வேண்டும்.
மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அரசியல்வாதிகள் கூட்டத்தொடரை புறக்கணித்தால் அவர்கள் உண்மையிலே தேசத்தின் பாதுகாப்பு குறித்து அக்கறை உடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்வது ஒன்றாகவும், வெளியில் நடப்பது ஒன்றாகவும் இருக்கிறது என்றார் பிட்டா.












Click it and Unblock the Notifications