சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்
தூத்துக்குடி: சட்டசபைத் தேர்தலில் நாம் சகவாசம் சரியில்லாததால்தான் தோற்றோம். எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டுவோம் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தூத்துக்குடி, முத்தையா புரத்தில் இளங்கோவன் கோஷ்டியினரும், ஜி.கே.வாசன் கோஷ்டியினரும் இணைந்து காமராஜர் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
அப்போது இளங்கோவனை, அடுத்த காங்கிரஸ் தலைவர் என்று அவரது கோஷ்டியினர் புகழ்ந்து பேசினர். அதைக் கேட்டு வாசன் கோஷ்யிடினர் அமைதியாக இருந்தது வியப்பை அளிப்பதாக இருந்தது.
நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில்,
வெற்றி, தோல்வி என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொருட்டே அல்ல. எங்கள் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. இந்தியா இருக்கும்வரை காங்கிரஸ் கட்சி இருக்கும்.
ஐந்து மாநிலங்களில் நடைபெற்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி தோற்றது ஏன்? சகவாசத்தால் தான் தோற்றோம்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு உள்ளது என்று கூறுகிறார்கள். ஊழலை காங்கிரஸ் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. ஊழல் என்றால் நடவடிக்கை எடுக்க தயங்காது. கல்மாடி, சவான் ஆகியோர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லையா?.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. அவற்றை மீட்கக் காவல் துறையில் தனிப்பிரிவு அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளளதை வரவேற்கிறோம்.
மக்களிடம் எங்கள் கட்சியின் செல்வாக்கை எடுத்துக் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். கட்சித் தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்து இது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications