மும்பை குண்டுவெடிப்பு-2 சந்தேக நபர்கள் மீது வழக்குப் பதிவு, கைது
கிஷன்கஞ்ச் (பீகார்): மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹூஜி அமைப்பைச் சேர்ந்தவர்களாக சந்தேகிக்கப்படும் 2 பேர் மீது பீகார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.
கடந்த 13-ம் தேதி மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரது பெயர் முகம்மது ரியாசுல் சர்கார் என்கிற ஆகாஷ் கான். இன்னொருவர் முகம்மது மக்தாப் ஆலம். இவர்களில் சர்கார் கடந்த 16ம் தேதி பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்தான் மக்தாப் ஆலம்.
இந்தக் கைது குறித்து மாவட்ட எஸ்.பி. ஆர்.கே.மிஸ்ரா கூறுகையில், வெளிநாட்டவர் சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சர்கார் தான் ஒரு இந்தியர் என்றும், பெங்களூரில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் கொடுத்த பெங்களூர் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஒன்று மட்டும் உறுதி, சர்கார் நிச்சயமாக இந்தியர் கிடையாது.
அவரிடமிருந்து பல டைரிகள், சிம் கார்டுகள், வங்கி கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம். அதை வைத்து விசாரணை நடந்து வருகிறது.
இருவரும் ஹர்கத்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி அமைப்பச் சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறிவிட முடியாது. அதற்கான ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுக்கவுள்ளோம் என்றார்.
சர்கார் மகேஷாபுரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கன்னடம், குஜராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் சரளமாக பேசுகிறார். சர்கார் ஆலமுடன் 7 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்.
சர்காரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், மராத்தியில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications