வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன்
மும்பை: மத்திய பிரதேசத்தில் தன் உடல் திடகாத்திரமாக இருப்பதற்காக மனைவியின் ரத்தத்தை குடித்து வந்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள ஷிகார்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அஹிர்வார். விவசாயக் கூலி. அவருக்கும் தீபா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே அவர் தீபாவின் ரத்தத்தை குடித்து வந்துள்ளார். தீபா கர்ப்பமாக இருந்தபோது கூட அவரை விட்டுவைக்கவில்லை. அவ்வாறு ரத்தத்தை குடிப்பதன் மூலம் தான் திடகாத்திரமாக இருக்கலாம் என்று நினைத்து இவ்வாறு செய்து வந்துள்ளார் மகேஷ்.
தன்னுடைய இந்த வினோத பழக்கம் பற்றி வெளியில் சொன்னால் தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தீபாவை மிரட்டுயுள்ளார். அதற்கு பயந்து கடந்த 3 ஆண்டுகளாக தீபா இந்த கொடுமையை அனுபவித்து வந்துள்ளார்.
அன்மையில் தீபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இனியும் இந்த கொடுமையைத் தாங்க முடியாது என்று நினைத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து தீபா கூறியதாவது,
எனது கணவர் மகேஷ் ஒரு ஊசியை எடுத்து என் கையில் இருந்து ரத்தம் எடுப்பார். அதை ஒரு டம்ளரில் ஊத்திக் குடிப்பார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் இந்த கொடுமையைத் தான் செய்துள்ளார். யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டி வைத்தார் என்றார்.
அடிக்கடி தீபாவின் உடலில் இருந்து ரத்தம் எடுத்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் ரத்தம் எடுக்க அனுமதிக்காவிட்டால் அவரை அடித்து உதைத்துள்ளார் மகேஷ்.
இந்த கொடுமையைத் தாங்கமுடியாமல் தீபா தனது மகனைத் தூக்கி்க் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு தனது பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அவர் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீபாவின் தந்தை தனது மகளை அழைத்துக் கொண்டு படேரா காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மகேஷ் வாழும் ஹின்டோரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதற்குள் மகேஷ் தலைமறைவாகிவிட்டார். ஹின்டோரியா போலீசாரும் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.
மகேஷின் இந்த கொடூரச் செயல் குறித்த தகவல் அவரது சொந்த ஊரில் பரவியது. இதையடுத்து அந்த கிராமத்தினர் திரண்டு வந்ததால் ஹின்டோரியா போலீசார் புகாரை ஏற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications