சங்கரன்கோவிலில் அடுத்தடுத்து 2 பேர் கொலை: கொலையாளிகள் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே ஒரே நாளில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஒருவர் பழிக்கு பழியாகவும், மற்றொருவர் சொத்து தகராறிலும் கொல்லப்பட்டனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் கீழ ரதவீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். தச்சு தொழிலாளி. இவரது மனைவி மீனா. மாரியப்பனின் கொடுமையைத் தாங்க முடியாமல் அவரது மனைவி மீனா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாரியப்பன் கடந்த 3 மாதத்திற்கு முன் விடுதலை செய்யப்பட்டார். இது மீனாவின் குடும்த்தினருக்கு ஆத்திரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
நேற்று குருவிகுளத்தில் துக்க வீடு ஒன்றுக்கு சென்று விட்டு மாலை மாரியப்பன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மீனாவின் சித்தி மகன் சங்கிலிமாடசாமி என்பவர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிச் சாய்த்தார். இதில் மாரியப்பன் தலை தூண்டாகி இறந்தார். இதையடுத்து சைக்கிளில் தப்பிச் சென்ற சங்கிலிமாடசாமியை போலீசார் கழுகுமலையில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இவருடன் உடன் பிறந்த அண்ணன் பேத்திராஜ் மகன் ஜெயமுருகன் வேலை பார்த்து வந்தார். ஒரு ஆண்டுக்கு முன் ஜெயமுருகன் வேலையை விட்டு நின்று விட்டார்.
இதற்கிடையே அவருடைய தந்தையும், தாயும நோயால் இறந்தனர். ஜெயமுருகன் தனி்மைப்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து தனக்குரிய சொத்தை பிரித்து தரும்படி சித்தப்பா பாபுவிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை மலையன்குளம் சென்ற ஜெயமுருகன் சித்தப்பாவிடம் சொத்து பற்றி கேட்டார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெயமுருகன் பாபுவை கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்தி ஜெயமுருகனை கைது செய்தனர். சங்கரன்கோவிலில் ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications