குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் இந்தியா வந்த ஹில்லாரி- கிருஷ்ணாவுடன் பேச்சு

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளி்ண்டன் நேற்றிரவு டெல்லி வந்திறங்கினார். கடந்த 13-ம் தேதி தான் மும்பையின் 3 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 19 பேர் பலியாகினர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்கள் பற்றிய தகவல் கிடைத்தும் ஹில்லாரி தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்யவில்லை. குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மத்தியில் அவர் இந்தியா வந்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஹில்லாரி கிளி்ண்டன் இந்தியா வருவகு இது இரண்டாவது முறை ஆகும்.
அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்கள் இருவரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல், விவசாயம், வாணிபம், தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை பற்றி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
சென்னையில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு
இது வரை தென்னிந்தியா பக்கம் வராத ஹில்லாரி முதன்முறையாக சென்னைக்கும் வருகிறார். அங்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஹில்லாரியுடன், ஜெயலலிதா பேசுவார் எனத் தெரிகிறது.
மேனனுடன் ஹில்லாரி சந்திப்பு
முன்னதாக நேற்று இரவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், ஹில்லாரியை சந்தித்துப் பேசினார்.
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஹில்லாரி நாளை சென்னை வருகிறார். இதையடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications