சமச்சீர் கல்வி: அதிமுக அரசின் செயல் வேதனையளிக்கிறது- ஸ்டாலின்
சென்னை: 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்வது வேதனை அளிப்பதாக உள்ளது என்று கொளத்தூர் எம்.எல்.ஏ. வும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
பேராயர் எஸ்றா சற்குணத்தின் 73-வது பிறந்த நாள் விழா மற்றும் இந்திய சமூக நீதி இயக்க தின விழா கீழ்பாக்கம் இறையியல் கல்லூரியில் நேற்று காலை நடந்தது. இதில் கொளத்தூர் எம்.எல்.ஏ. வும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகைதீன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேராயரை வாழ்த்தினர்.
மு.க. ஸ்டாலின் பேராயருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
பேராயர் சற்குணம் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அரசு எப்படி பல்வேறு நலத்தி்ட்டங்களை அறிமுகப்படுத்துகிறதோ, அதேபோன்று பேராயரும் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் பேசுகையில் சூரியண் மீண்டும் உதிக்கும். அந்த உதயத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மாணவர்களும் ஒரே மாதிரியான கல்வி கற்க திமுக ஆட்சியில் கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்தும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
கருணாநிதி அறிமுகப்படுத்தியதால் சமச்சீர் கல்வியை அமல்படுத்த விடக்கூடாது என்று அதிமுக அரசு முயற்சி செய்கிறது. இதுவே அவர்கள் கொண்டு வந்து நாங்கள் அதை அமல்படுத்த விடாமல் செய்தால் இந்நேரம் பதவியை விட்டு விலகுமாறு அல்லவா கூறியிருப்பார்கள்.
ஆனால் திமுக தலைவரோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் யாருக்கும் வெற்றி, தோல்வி என்றெல்லாம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துங்கள் என்று தானே கூறுகிறார். இவ்வளவு ஏன் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே இதைத் தான் விரும்புகின்றன.
இந்நிலையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்வது வேதனை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு காலத்தை கடத்திக் கொண்டே போவது ஏழை மாணவர்கள், பணக்கார மாணவர்கள் போன்று கல்வி கற்கக் கூடாது என்றா? அதற்காகத் தான் ஆடு, மாடுகளை இலவசமாகக் கொடுத்து மேய்க்கச் சொல்கிறார்களா? என்றார்.
இந்த விழாவில் பேராயர் எஸ்றா சற்குணம் தலித் பவுண்டேஷன் சமூக நலத்திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 781 பேருக்கு ரூ. 5 கோடியே 27 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications