2ஜி வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் விவாதம்: ராசாவின் எதிர்ப்பை நிராகரித்த நீதிமன்றம்

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு திகார் சிறையிலிருக்கும் ராசாவும், 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுராவும், ராசாவின் முன்னாள் அரசுச் செயலாளர் சந்தோலியாவும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான விவாதம் நீதிமன்றத்தில் தொடங்குவதை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.
இந்த விவாதத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இது தொடர்பாக ராசாவின் சார்பில் வழக்கறிஞர் மனு ஷர்மா, பாலாஜி சுப்பிரமணியன் ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 3 பக்க மனுவில்,இந்த வழக்கில் 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, அந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வேறொரு தேதியில் குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்காக விவாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். சிபிஐ தனது குற்றப்பத்திரிகைகளை முழுமையாக தாக்கல் செய்த பின்னர்தான் நீதிமன்றம் இந்த விவாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் பட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வைத்து ராசாவையும், பிறரையும் கடந்த ஜூலை 18ம் தேதி சிபிஐ 3 மணி நேரம் விசாரணை நடத்தியதைச் சுட்டி காட்டிய ராசாவின் வழக்கறிஞர், இதன்மூலம் இந்த வழக்கில் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது என்பது உறுதியாகிறது. விசாரணை முடிந்துவிட்டது என்றால் எந்த விதியின் கீழ் ராசாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது? என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், இந்த வாதங்களைக் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி ராசா உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் நிராகரித்தார்.
ஏற்கெனவே அறிவித்தபடி இந்த ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான விவாதம் வியாழக்கிழமை முதல் (இன்று) தொடங்கும் என்று அறிவித்தார்.
இந்த குற்றப் பதிவுக்கான விவாதம் செப்டம்பர் வரை நடக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications