வாகன உற்பத்தி, சூரிய மின்சக்தி்யில் முதலீடு செய்க: அமெரி்க்காவுக்கு ஜெ. அழைப்பு
சென்னை: வாகன தயாரிப்பு, சூரிய மின்சக்தி போன்றவற்றில் தமிழகத்தில் அதிக முதலீடு செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியை கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று சென்னை வந்தார். தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது,
வாகன தயாரிப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்த தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றது. இந்த வாயப்புகளை பெருக்கிட பல்வேறு நாடுகளின் நடுத்தர நிறுவனங்களை அழைத்துப் பேசி புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தாயாரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 10 பூங்காக்கள் அமைத்து அவை ஒவ்வொன்றில் இருந்தும் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு திட்டமி்ட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும். இந்த திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் பங்குகொள்ள வேண்டும்.
2011 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையே தமிழகத்தில் மட்டும் 10 முதல் 12 மில்லியன் வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று மதி்ப்பிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவை 4 மடங்கு அதிகரிக்க வேண்டும்.
தமிழக அரசுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டால் சிறந்த தொழில் பயிற்சி அளிக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.1 லட்சம் கிமீ சாலையை மேம்படுத்த வேண்டும். அதற்கு 15 முதல் 20 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும். தென் மாவட்டங்களில் பல தொழிற்சாலைகளைத் துவங்க அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் அதற்கு சரியான உள்கட்டமைப்பு வசதி வேண்டும் என்றார்.
தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்து ஹிலாரி தனது கருத்தை தெரிவித்தார். மேலும், தொழிற் பயிற்சி திட்டங்களை பகிர்ந்துக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு வருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications