செங்கல்பட்டு அருகே பயங்கரம்- சைக்கிளில் போன தேமுதிக நிர்வாகி படுகொலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தேமுதிக நிர்வாகி கொடூரமாக கொல்லப்பட்டார். இதுதொடர்பாக திமுக பிரமுகரின் அடியாட்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு வயது 28. இவருக்கு மனைவியும், 7 மாதக் குழந்தையும் உளள்ளனர்.
பெயிண்டராக இருந்த சந்திரசேகர், வேலை இல்லாத நேரங்களில் தேமுதிகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். வல்லம் கிளை பிரதிநிதியாக இருந்த அவர் மாவட்டப் பிரதிநிதி கண்ணதாசனுடன் இணைந்து நெருக்கமாக செயல்பட்டு வந்தார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கண்ணதாசனின் சகோதரி கஸ்தூரியும், திமுக சார்பில் வில்சன் சாம்ராஜ் என்பவரின் தாயார் விசாலமும் வல்லத்தில் போட்டியிட்டனர். இதில் விசாலம் வெற்றி பெற்றார். அன்று முதல் கண்ணதாசன் தரப்புக்கும், வில்சன் தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
மேலும், கண்ணதாசனுடன் எப்போதும் இருப்பவர் என்பதால் சந்திரசேகர் மீதும் வில்சன் தரப்பு கடும் கோபத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று இரவு எட்டரை மணியளவில் பெயிண்டிங் வேலையை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் சந்திரேசகர். அப்போது திருக்கழுக்குன்றம் ரயில்வே கேட் பகுதியில் அவர் வந்தபோது நித்யா, பூபதி, மோகன், மாறன், அந்தோணி என ஐந்து பேர் அவரை வழிமறித்தனர்.
அவர்களைப் பார்த்த சந்திரசேகர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவரை விடாமல் துரத்திய ஐந்து பேரும் வழிமறித்து தடுத்து நிறுத்திப் பிடித்து சரமாரியாக அரிவாள்களால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்அங்கு சந்திரசேகர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்த தகவல் காட்டுத் தீ போல செங்கல்பட்டு முழுவதும் பரவி பெரும் பரபரப்பானது. க
தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் அங்கு விரைந்து சென்றனர். பதட்டமான நிலை நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், சந்திரசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் போலீஸார் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications