கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம்

கோவை சிங்காநல்லூரில் திமுக செயற் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இன்று பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட-மாநில செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் செயற் குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
-அதிமுக அரசின் பொய் வழக்குகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.கழகம் அறப்போர் நடத்தும். பொய் வழக்கு போட்டு, பழிவாங்கும் நோக்கோடு செயல்படும் அதிமுக அரசை கண்டித்து ஆகஸ்டு 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும்.
-மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும்.
-திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை என்று நான்கு இடங்களில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் புதிதாக கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. ஆனால் திமுக அரசு செய்த அனைத்துப் பணிகளையும் உருவில்லாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படும் அதிமுக அரசு, தேசிய அறிவுசார் ஆணையம் அறிவித்திருக்கும் அடிப்படைப் பரிந்துரைகளுக்கும் மாறாக, அதிக எண்ணிக்கையில் உயர் கல்விக்கான பல்கலைக் கழகங்களைத் தொடங்கி விட்டால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடாது என்று கூறிக்கொண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாகச்சுமை மிகுந்த பழைய நிலைக்கே கொண்டு வர முடிவெடுத்திருப்பதாகச் சொல்வது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர் கல்வியின் தரத்தையும், ஆராய்ச்சியின் தரத்தையும் நாசமாக்கி அழித்திடும் தவறான முயற்சி என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
-தமிழக அரசின் சார்பில் விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில், தமிழக அரசு 4200 கோடி ரூபாய்க்கு புதிய வரிவிதிப்பு செய்ததும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தார், ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஒரு காரணத்தைக் காட்டி அதன் மீதான வரியை ரத்து செய்வதாக அறிவித்ததும்- இந்த ஆட்சியாளர்களின் அவசரப்பட்ட முடிவுகள் என்று இப்பொதுக்குழு கண்டிப்பதோடு, எஞ்சியவற்றின் மீது உயர்த்தப்பட்ட வரிகளையும் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.
-கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சதவீத பங்குக்கு உரியவர் என்ற முறையில் அதை ஒரு குற்றமாக கற்பித்து கனிமொழியும், நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமீனில் வருவதைக் கூட சிபிஐ கடுமையான ஆட்சேபித்து, இத்தனை நாட்கள் சிறையிலே வைத்திருப்பது இயற்கை நியதிக்கும், நியாயங்களுக்கும் இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கும் புறம்பானது. பாரபட்சமானது.
-ஆ.ராசாவும், தயாநிதி மாறனும் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று சொல்லி பதவி விலகி இருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு விரைவில் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என பொதுக்குழு நம்புகிறது.
-மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கலைஞரின் நிலைப்பாட்டை இப்பொதுக் குழு ஏற்று வலியுறுத்துகிறது.
-புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை பயன்படுத்த வேண்டும். இந்த புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
இவை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications