ஈழத் தமிழர்களுக்காக துப்பாக்கி தூக்க வேண்டாம், கையெழுத்திடுங்கள்: திருமாவளவன் கோரிக்கை
புதுச்சேரி: ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் துப்பாக்கியைத் தூக்க வேண்டாம், வெறும் கையெழுத்துப் போட்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்தட்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவையில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதை துவக்கி வைத்து திருமாவளவன் பேசியதாவது,
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவால் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இது சர்வதேச போர்க்குற்றம் என்று ஐ.நா மற்றும் அமெரிக்க குழு அறிவித்தது.
இதையடுத்து இலங்கைக்கு அளித்து வந்த நிதி உதவியை அமெரி்க்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
இலங்கையில் தமிழ் ஈழ அரசு அமைய ருத்திரகுமார் தலைமையில் 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழ அமைப்பைச் சேர்ந்த தயாபரன் என்னை தொடர்பு கொண்டு இந்த இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
தனி ஈழ நாடு அமைய, ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட்டுள்ளது.
கடந்த 12-ம் தேதி துவங்கப்பட்ட இந்த கையெழுத்து இயகக்கம் வரும் 3-ம் தேதி முடிவடைகிறது. ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் துப்பாக்கியைத் தூக்க வேண்டாம், கையெழுத்து போட்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் என்றார்.












Click it and Unblock the Notifications