லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்

மத்திய அமைச்சரவை இன்று கூடி லோக்பால் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. அதில் லோக்பால் வரையறைக்குள் பிரதமர், நீதித்துறையை விலக்கி வைப்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் ஊழல் செய்தால் அவரை 7 ஆண்டுகளுக்குள் தண்டிக்க வேண்டும். அந்தக் காலத்தைத் தாண்டி விட்டால் அவரை விசாரிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அன்னா ஹஸாரே குழுவினர் அளித்த லோக்பால் மசோதா பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை முற்றிலும் நிராகரித்து விட்டது.
இதனால் ஹஸாரே குழுவினர் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். இதுகுறித்து கிரண் பேடி கூறுகையில், இது பல்லே இல்லாத லோக்பால் மசோதா. இப்படி ஒரு மசோதாவை வைத்துக் கொண்டு ஊழலை நிச்சயம் ஒழிக்க முடியாது.
பிரதமரை லோக்பால் சட்டத்திற்குள் கொண்டு வராவிட்டால், பின்னர் அனைத்து மாநில முதல்வர்களையும் கூட அந்த வரையறைக்குள் கொண்டு வரக் கூடாது. இந்த மசோதா மிகவும் மோசமானது என்று வர்ணித்தார்.
இந்த நிலையில் அன்னா ஹஸாரே இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், இது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி ஆகஸ்ட் 16ம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரதத்தைத் தொடங்குவோம். கடந்த முறையைப் போலவே நாட்டு மக்கள் எனக்கும், எனது குழுவினருக்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications