பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் ராசாவிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை
டெல்லி: டெல்லி, பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் ராசாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, ராசாவிடம் சமீபத்தில் சிபிஐ கோர்ட் வளாகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்த சிபிஐ கோர்ட்டின் அனுமதியைப் பெற்றனர். இதையடுத்து நேற்று பிற்பகலுக்கு மேல் ராசா உள்ளிட்ட 6 பேரிடம் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
சென்னையிலிருந்து வந்த குழுவினர் ராசாவிடம் விசாரணை நடத்தினர். ராசா தவிர ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்தர் பிபாரா ஆகியோரிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.
விசாரணை விவரம் எதையும் வருமான வரித்துறையினர் தெரிவிக்கவில்லை. 6 பேரிடமும் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ கோர்ட் அனுமதி அளித்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications