ராஜினாமா செய்யாமல் முரண்டு பிடித்த எதியூரப்பா-பாஜக கூட்டத்தைப் புறக்கணித்தார்

கர்நாடக சுரங்க ஊழல் குறித்து லோக் ஆயுக்தா நேற்று 20,000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் எதியூரப்பா, அவரது குடும்பத்தினர், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் எம்.பி. அனில் லாத் உள்ளிட்டோர் பெருமளவில் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து எதியூரப்பா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் நேற்று அவசரமாக டெல்லி கிளம்பி வந்தார் எதியூரப்பா. அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. நான் ஏன் விலக வேண்டும்?.
எங்களது தலைவர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அனைத்து எம்.எல்.ஏக்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். எனவே ராஜினாமா என்ற கேள்வியே எழவில்லை.
எதையும் நீங்களாக கணிக்காதீர்கள். நான் கட்சித் தலைவர் நிதின் கத்காரியுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். எனது நிலையையும், லோக் ஆயுக்தா அறிக்கை விவரத்தையும் அவரிடம் விளக்குவேன்.
லோக் ஆயுக்தா அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. எல்லாமே பழைய விவகாரங்கள்தான். பல்வேறு கோர்ட்களில் ஏற்கனவே நிலுவையில் இருப்பதைத்தான் தொகுத்துக் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமையன்று பெங்களூர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளேன். அதில் லோக் ஆயுக்தா அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.
கத்காரியை எச்சரித்தை எதியூரப்பா
பின்னர் கட்சியின் தலைவர் கட்காரியை அவர் சந்தித்தார். அப்போது அவரை பதவி விலகுமாறு பாஜக தலைமை நேரில் கேட்டுக் கொண்டது. இருப்பினும் தனது லிங்காயத்துக்கு சமூக எம்எல்ஏக்களின் கணக்கைக் காட்டி பதவி விலக எதியூரப்பா மறுத்து வருகிறார். தன்னை நீக்கினால் ஆட்சி கவிழும் என எச்சரித்துள்ளார் எதியூரப்பா.
இதையடுத்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்க பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கட்காரி தலைமையில் இன்று டெல்லியில் நடந்தது. அதில் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்குமாறு எதியூரப்பாவையும் அழைத்திருந்தனர். அவர் வருவார் எனக் காத்திருந்தனர். ஆனால் அவர் டேக்கா கொடுத்து விட்டு பெங்களூர் போய் விட்டார்.
கடுப்பான கத்காரி
சொல்லாமல் கொள்ளாமல் பெங்களூர் கிளம்பிப் போன எதியூரப்பாவால் கத்காரி உள்ளிட்டோர் கடும் எரிச்சலுக்குள்ளாகினர்.
இதையடுத்தே அவரை பதவியிலிருந்து தூக்கும் முடிவுக்கு பாஜக வந்ததாக தெரிகிறது. உடனடியாக அந்த முடிவு எதியூரப்பாவுக்கும் 'பாஸ்' செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications