திருமங்கலம் சிறுமியின் அவலம்- உதவி நாடிப் போனவரே விபச்சாரக் கும்பலிடம் விற்க முயற்சித்தார்!
ராமநாதபுரம்: விபச்சாரக் கும்பலிடமிருந்து மீண்டு தொண்டு நிறுவனத்திடம் தஞ்சமடைந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டிச்செல்வியை, அந்த தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த நபரே விபச்சாரக் கும்பலிடம் மீண்டும் விற்ற கொடுமை தெரிய வந்து அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரைசுதீன் என்ற அந்த நபருடன் இதுவரை 6 பேர் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர். பல முக்கியப் பிரமுகர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கொச்சியில் மாணவி ஒருவரை நூற்றுக்கணக்கானோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டை அதிர வைத்தது. தற்போது அதே பாணியில் மதுரை அருகே திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு நேர்ந்துள்ளது.
பாண்டிச்செல்வி என்ற அந்தப் பெண்ணுக்கு 12 வயதாக இருக்கும்போது திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி திருமங்கலத்தில் ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
அவருடன் வேலை பார்த்து வந்த பெண்ணின் தாயார், பாண்டிச்செல்வி மனதை மாற்றி ஒரு விபச்சார புரோக்கரிடம் விற்று விட்டார். அதன் பின்னர் பாண்டிச்செல்வியின் வாழ்க்கை சீர்குலைந்தது. பல்வேறு ஊர்களுக்கு அவர் மாற்றி மாற்றி விற்கப்பட்டு விபச்சாரக் குழியில் தள்ளப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் திமுக நகராட்சித் தலைவர் ஜலீல் உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று வரை 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட காவல்துறை எஸ்.பி. அனில்குமார் கிரி, பாண்டிச்செல்வியிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண் புரோக்கர் பிடியில் பாண்டிச்செல்வி இருந்தபோது அந்தப் பெண், பாண்டிச்செல்வியிடம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தாய் என்றுகேட்டுள்ளார். அப்போது தனது சோகக் கதையைக் கூறி அழுதுள்ளார் பாண்டிச்செல்வி. இதைக் கேட்ட அந்த புரோக்கருக்கு மனம் இளகியது. செல்வியைக் காப்பாற்ற முடிவு செய்த அப்பெண் புரோக்கர், தனக்குத் தெரிந்த தொண்டு நிறுவனத்திடம் பாண்டிச்செல்வியை அழைத்துச் சென்று ஒப்படைத்தார்.
தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவரான ரைசுதீன், பாண்டிச்செல்வியிடம் நடந்ததைக் கேட்டுள்ளார். தன்னை காப்பாற்றப் போகிறவர் என்று நம்பி அனைத்தையும் கூறியுள்ளார் பாண்டிச்செல்வி. ஆனால் ரைசுதீனோ குரூர மனம் படைத்தவராக மாறியுள்ளார்.
பாண்டிச்செல்வியை மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்திப் பணம் பார்க்க அவர் தீர்மானித்தார். அவரும் பாண்டிச் செல்வியை அடைய முயன்றுள்ளார். பின்னர் பாண்டிச்செல்வி ஏற்கனவே சிக்கியிருந்த ஒரு விபச்சாரக் கும்பலிடமே அவரை ஒப்படைத்து பெரும் பணம் பார்க்க முடிவு செய்தார்.
இதையடுத்து மதுரையிலிருந்து அக்கும்பலை வரவழைத்த ரைசுதீன், சிறுமியை நேரடியாக விபச்சாரக் கும்பலிடம் ஒப்படைத்தால் சிக்கலாகி விடும் என்பதால் அவரது தாயாரை வரவழைத்து ஒப்படைக்க முடிவு செய்தார். பாண்டிச்செல்வியின் தாயாரை மெதுவாகப் பேசி ராமநாதபுரத்திற்கு வரவழைத்தார். தனது தாயாரைப் பார்த்த பாண்டிச்செல்வி கதறி அழுது நடந்ததைக் கூறியபோதுதான் தனது மகளின் நிலை குறித்து அவரது தாயாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கத்திக் கூச்சல் போடவே வந்த விபச்சாரக் கும்பல் ஓடி விட்டது. ரைசுதீன் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல், போலீஸாரிடம் பாண்டிச்செல்வியை ஒப்படைத்து தப்ப நினைத்தார். ஆனால் பாண்டிச்செல்வி ரைசுதீனின் முகத்தை அம்பலப்படுத்தவே அவரை போலீஸார் கைது செய்தனர்.
ரைசுதீன் தவிர புரோக்கர்கள் துரைராஜ், செல்வி, லாட்ஜ் உரிமையாளர் சுப்பிரமணி, லாட்ஜ் ஊழியர்கள் ராமகிருஷ்ணன், சரவணக்குமார் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கில் மேலும் 6 பேர் சேர்க்கப்பட்டு மொத்தம் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications