இறக்குமதி வரி குறைப்பால் ரப்பர் விலையில் தொடர் சரிவு
குலசேகரம்: ரப்பர் இறக்குமதி வரிக்குறைப்பால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை சரிந்துள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தரம் வாய்ந்த ரப்பர் உற்பத்தியாகிறது. வெளிநாட்டு ரப்பர் மீதான இறக்குமதி அதிகமாக இருந்ததால் உள்நாட்டு ரப்பரை தொழிற்சாலைகள் நம்பி இருந்தன. இதனால் சர்வதேச மார்கெட் விலையை விட அதிக விலைக்கு உள்ளூர் ரப்பர் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
இதனால் உள்நாட்டு ரப்பர் கிலோ 250 ரூபாய் வரை உயர்ந்தது. ரப்பர் விலை அதிகரித்ததால் ரப்பர் பால் வெட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்தது.
இந்நிலையில், மத்திய அரசு ரப்பர் இறக்குமதி மீதான வரியை 20 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதம் என குறைந்துள்ளது. இதனால் ரப்பர் தொழிற்சாலைகள் உள்நாட்டு ரப்பர் கொள்முதலை குறைத்து வெளிநாட்டு ரப்பர் இறக்குமதியில் ஆர்வம் காட்டுகின்றன. இதனால் உள்நாட்டு ரப்பர் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு கிலோ 250 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட ரப்பர் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆர்.எஸ்.எஸ் 4 என்ற முதல் தர ரப்பர் 216.50 ரூபாய்க்கும், 2ம் தர ரப்பர் 212.50 ரூபாய்க்கும் குமரியில் அதிகம் கிடைக்கும் லாட் ரக ரப்பர் 210 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
நேற்று மேலும் விலை சரிந்து ஆர்எஸ்எஸ் 4 ரக ரப்பர் ரூ 204 ரூபாய், ஆர்எஸ்5 ரூ 201.50, ஸ்கிராப் எனப்படும் ஒட்டுபால் 150 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications