கட்சி முடிவை மதித்து பதவி விலகி விட்டேன், இனி நான் சுதந்திர மனிதன்-எதியூரப்பா
பெங்களூர்: கட்சித் தலைவர்களை மதித்து அவர்களது உத்தரவுப்படி நான் பதவியிலிருந்து விலகி விட்டேன். மக்களுக்காக, மக்கள் நலனுக்காக நான் உழைத்தேன். இனி நான் சுதந்திர மனிதன் என்று கூறியுள்ளார் முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ள எதியூரப்பா.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று மாலை தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஊர்வலமாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பரத்வாஜை சந்தித்துக் கொடுத்தார் எதியூரப்பா.
பின்னர் வெளியில் வந்த எதியூரப்பா எழுதி வைத்திருந்த செய்திக்குறிப்பை வாசித்தார். அதில் தனது ஆட்சி செய்த சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை வாசித்தார்.
அவர் கூறுகையில், கட்சித் தலைவர்களின் உத்தரவை ஏற்று, அவர்களை மதித்து நான் பதவியிலிருந்து விலகியுள்ளேன். மக்களுக்காக நான் உழைத்தேன். அந்த வாய்ப்பை அளித்த கட்சித் தலைமைக்கும், மக்களுக்கும், அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் எதியூரப்பா.
முன்னதாக அவர் கூறுகையில், விதான செளதாவிலிருந்து செயல்பட விடாமல் எனது கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டு விட்டனர். இருப்பினும் இப்போது நான் பதவியிலிருந்து விலகி விட்டேன். இனிமேல் நான் சுதந்திர மனிதன். மக்களை நான் இனி சந்திக்க எந்தவித சிக்கலும் இல்லை, தடையும் இல்லை. என்னை இனி யாரும் தடுக்க முடியாது.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக இனி உழைக்கப் போகிறேன். பெண்கள் நலனுக்காக உழைக்கப் போகிறேன். மக்களுக்காக பாடுபடப் போகிறேன். இதை யாரும் தடுக்க முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications