இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கவில்லை-கருணாநிதி

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டப் பேரவையில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றிய காரணத்தால் தான் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துவிட்டதாகச் சிலர் பாராட்டுகின்றனர். தொல்.திருமாவளவன் கூட ஓர் அறிக்கையில் அது உண்மையாக இருக்குமோ என்று எண்ணி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறினர்.
அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான குழு, போர்க் குற்றங்களை அடுத்து இலங்கை அரசுக்கு உதவிகளை ஒரு வரையறைக்குள் நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை கூட உடனடியாக அமலுக்கு வராது.
2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கும் நிதியாண்டில் இலங்கைக்கான உதவி நிறுத்தம் பற்றிய இந்தக் குழுவின் பரிந்துரை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட், காங்கிரஸ் என்ற இரண்டு அவைகளிலும் வைக்கப்பட்டு, அவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
இந்த ஆலோசனை கடந்த பல வாரங்களாக இக்குழுவின் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தியச் சுற்றுப் பயணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்ற நாடுகள் குறித்த விவகாரங்களை இந்திய அரசிடம் மட்டும்தான் விவாதிப்பாரே தவிர, இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசிடமும் விவாதிக்க மாட்டார்.
ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்று தெரியாமல் அதிமுகவின் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி வருகின்றனர்.
இப்படித்தான் கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஐ.நா.சபை அவருக்கு கௌரவ விருது வழங்கப் போகிறது என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் ஐ.நா.சபையின் அங்கீகாரம் பெற்ற அரசு சாரா அமைப்புகள் 2 ஆயிரத்து 531 ஆகும். இந்த அமைப்புகள் எதுவும் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கவில்லை என்று பின்னர் தெரிய வந்தது.
அதற்குள் ஐ.நா.சபையின் 'தங்கத் தாரகை விருது' என்றெல்லாம் விளம்பரப் படுத்தினார்கள். அதைப்போலவே இப்போதும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துவிட்டது என்று செய்தி பரப்புகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications