ஜெ.வை எதிர்த்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைது: கடையநல்லூர் காவல் நிலையம் முற்றுகை
கடையநல்லூர்: முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டிய கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை இன்று தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்த மசோதா மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் ஜெயலலிதாவி்ன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆர்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நகர செயலாளர் காஜாமூகைதீன், மாணவர் அணி செயலாளர் ரமீத் ஹாசன் உள்பட ஏராளமானோர் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டினர். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த புளியங்குடி டிஎஸ்பி சமீம் மற்றும் போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
நேற்று ரமலான் நோன்பு துவக்க நாள் என்பதால் முஸ்லீம்கள் அனைவரும் நோன்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 2 பேர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்ததும் நகராட்சி பகுதி முஸ்லீம்கள் பெரும்பாலானோர் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை விட்டுவிடுவதாகக் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர்.
ஆனால் போலீசார் உறுதியளித்தபடி அவர்களை விடுவிக்காததால் மீண்டும் அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையி்ட்டனர். போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. போலீசார் அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டும் யாரும் கலைந்துபோகவில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications