இங்கிலாந்தில் 12 மணிநேரம் தொடர்ந்து வீடியோ கேம் ஆடிய வாலிபர் பலி

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேவிட் மகன் கிரிஷ் ஸ்டேனிபோர்த் (20). வீடியோ கேம்கள் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். இந்நிலையில், எக்ஸ் பாக்ஸ் என்ற வீடியோ கேமில் ஆன்-லைன் மூலம் பலருடன் விளையாடி வந்தார்.
அப்படி தொடர்ந்து 12 மணிநேரம் விளையாடிய அவர், திடீரென மயக்கமடைந்து விழுந்தார். நல்ல உடல்நிலையில் இருந்த அவர் திடீரென மயக்கமடைந்து விழுந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிகிச்சையளித்த டாக்டர்கள் கூறுகையில், தொடர்ந்து 12 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இடைவிடாமல் விளையாடியதால், மூளை செயல்பாடு அதிகரித்து நரம்புகளில் ரத்தம் உறைவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.
ஸ்டேனிபோர்த் தந்தை டேவிட் கூறுகையில், இதில் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமை தயாரித்த நிறுவனத்தின் மீது எந்த குற்றமும் இல்லை. அதை விளையாடியவர் தரப்பையே குற்றம் சாரும். ஏனெனில், விளையாட்டை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விளையாடாமல், அதிலேயே மூழ்கி, தொடர்ந்து விளையாடியதால், ஸ்டேனிபோர்த் இறந்தான். இதன்மூலம் அப்படி விளையாடுபவர்களுக்கு ஒரு முன்னுதாரமாக மாறிவிட்டான், என்றார்.
வீடியோ கேம் தயாரித்த நிறுவனத்தினர் கூறுகையில், நன்கு திறமையானவர்களை கொண்டே கேம்களை தயாரிக்கிறோம். விளையாடுபவர்கள் தகுந்த உடற்பயிற்சியும், இடைவெளியும் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம், என்றனர்.












Click it and Unblock the Notifications