பாரத் பெட்ரோலியம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஆக. 15க்கு தள்ளி வைப்பு
சென்னை: பாரத் பெட்ரோலியம் கழக தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்டு 3-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகக்கூறி 'பாரத் பெட்ரோலியம்' கழக (பி.பி.சி.எல்.) ஊழியர்கள், அந்த நிர்வாகத்துக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.பி.சி.எல். நிர்வாகத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். போராட்டத்துக்கான நோட்டீஸ் அளிப்பது சட்டவிரோதமாகாது என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து பி.பி.சி.எல். நிர்வாகம், மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.
தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக வாரணாசியில் 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாகவும், அங்கு அவர்களின் பிரச்சினை பேசி தீர்க்கப்படும் என்றும் பி.பி.சி.எல். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை நடத்துவதால், தொழிலாளர்களின் போராட்டத்தை தள்ளிவைக்க முடியுமா? என்பதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வேண்டுமானால் போராட்டத்தை 15-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக தொழிலாளர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் தொழிலாளர்கள் சட்டப்படி செயல்படலாம் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications