10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!
திருவட்டார்: தனது முதல் மனைவியும், 2வது மனைவியும் அடுத்தடுத்து வீட்டை விட்டு வெளியேறியதால் கணவர் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதுகுறித்துப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஷியாம் ராஜ். இவருக்கு வயது 33 ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஆனால் அந்தப் பெண், ஏற்கனவே தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஷியாமுடன் குடும்பம் நடத்த மனம் இல்லாமல், கல்யாணமாகி 10 நாளிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இதனால் மனம் உடைந்த ஷியாம் ராஜ், மனதை தேற்றிக் கொண்டு தனது ஊரைச் சேர்ந்த ஜெனீபா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். ஆனால் ஷியாம் ராஜின் நேரமோ என்னவோ இந்தப் பெண்ணும் தனது உறவினர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
அந்த வாலிபர் வெளிநாடு போயிருந்த சமயம் பார்த்து ஜெனீபாவின் குடும்பத்தினர், ஷியாமுக்கு மணம் முடித்து வைத்து விட்டனர்.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து திரும்பினார் ஜெனீபாவின் காதலர். அதன் பின்னர் ஜெனீபா வீட்டை விட்டு வெளியேறி அந்த வாலிபருடன் போய் விட்டார். திருமணம் நடந்த ஒரே மாதத்தில் ஜெனீபா வீட்டை விட்டு ஓடி விட்டார்.
இப்படி அடுத்தடுத்து தனது 2 மனைவிகளும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார் ஷியாம் ராஜ்.
தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஷியாம் ராஜ். அதில், ஜெனீபா வீட்டை விட்டு ஓடியது மட்டுமல்லாமல் எனது தங்கையின் வளையல்களையும், எனது பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு போயுள்ளார். அவற்றை மீட்டுத் தர வேண்டும். அதேபோல ஜெனீபாவையும் மீட்டுத் தர வேண்டும். அவரை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷியாம் ராஜ்.












Click it and Unblock the Notifications