5,554 இலங்கை அகதிகளுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம்- ஜெ
சென்னை: சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ரூ. 1,000 ஓய்வூதியமாகப் பெற உள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளார். எனவே தான் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அமெரிக்கத வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவர்களுடனான சந்திப்பின்போதும், முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரைந்து தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.
தமிழகத்துக்கு அகதிகளாக வந்து, முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் நலனிலும் முதல்வர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்தார்.
இதை செயல்படுத்தும் வகையில், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ரூ. 1,000 ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆஸி செல்ல முயன்ற 99 இலங்கை தமிழ் அகதிகள் பிடிபட்டனர்:
இந் நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு இடத்தில் தங்கியிருந்த 99 பேரை பிடித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இலங்கை தமிழ் அகதிகள் முகாமைச் சேர்ந்த தமிழர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் முகாம் அனுமதியில்லாமல் வெளியே வந்த அவர்கள் உரிய அனுமதியின்றி விசாகப்பட்டினத்திலிருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து பிடிபட்ட அனைவரையும் ஆந்திர மாநில போலீசார் சென்னையில் உள்ள அகதிகள் மறுவாழ்வுத்துறை கமிஷனரிடம் ஒப்படைத்தனர். அந்த 99 தமிழ் அகதிகளும் உரிய விசாரணைக்கு பிறகு அந்த அந்த மாவட்ட கியூ பிரிவு போலீசார் மூலம் அவர்கள் தங்கியிருந்த முகாம்களுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications