கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு
வேலூர்: திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு மாநில அரசு திமுகவினரை கைது செய்வதாக கருணாநிதி கூறுகிறார். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது என்று இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ. கு. தமிழரசன் கூறியுள்ளார்.
இந்திய குடியரசு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வேலூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக் கட்சியின் மாநில தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு தமிழக அரசு எதிராக இருப்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
கடந்த திமுக அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை. இதனால், அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளக் கூடிய வகையில் அத்திட்டத்தை ஒரு ஆண்டு கழித்து செயல்படுத்துவதாக அரசு கூறியுள்ளது.இதனை குடியரசு கட்சி வரவேற்கிறது.
சமச்சீர் கல்வி சம்பந்தமாக கடந்த திமுக அரசால் அமைக்கப்பட்ட முத்துக்குமாரசாமி கமிட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. ஆனால் கடந்த திமுக அரசு இதில் 10 பரிந்துரைகளை கூட ஏற்கவில்லை. அப்படியிருக்கையில், அந்த சமச்சீர் பாடபுத்தகங்கள் எப்படி தரமானதாக இருக்க முடியும் ?
திமுக மீது பொய் வழக்கு போட்டு மாநில அரசு திமுகவினரை கைது செய்வதாக கருணாநிதி கூறுகிறார். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது.
போலீசார் யார் மீதும் தானாக வழக்கு போடவில்லை. போடவும் முடியாது. ஆதாரத்துடன் வரும் புகாரின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications