கட்டுக்கடங்காமல் இருக்கும் கல்விக் கட்டணம்- அரசு தலையிட கோரிக்கை
நெல்லை: கட்டண விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் காப்பதால் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் கட்டணக் கொள்ளை நடத்தி வருகின்றன. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரசு பாடத்திட்டம், ஓரியண்டல், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்இ என 5 கல்வி முறைகள் உள்ளன. கல்வியை வியாபாரமாக பாவித்து கல்வி நிறுவனங்களை துவங்கியவர்கள் எந்த உத்தரவிற்கும் கட்டுப்படாமல் தங்கள் இஷ்டம் போல் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர்கள் கல்வித் துறைக்கு புகார் கொடுத்தன. கட்டணத்தை முறைப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து பள்ளிகளின் கட்டமைப்புக்கு தகுந்தவாறு தனித் தனியாக கல்வி கட்டணம் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்து 6 ஆயிரத்து 400 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. அதன் அடிப்படையில் நீதிபதி ரவி ராஜபாண்டியன் கமிட்டி பள்ளிகளிடம் விசாரணை மேற்கொண்டு 2010-11, 2011-12, 2012-13 ஆகிய 3 ஆண்டுகளுக்கு பொருத்தும் வகையில் கட்டணத்தை 40 சதவீதம் வரை உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது. பள்ளிகளுக்கும் தனித் தனியாக கட்டண உயர்வு அனுப்பப்பட்டு உடனடியாக பெற்றோர் பார்வைக்கு நோட்டீஸ் போர்டில் ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதன்படி கட்டணம் வசூலிக்காமல் தாறுமாறாக வசூலில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவு அளிப்பது போல் அரசும் கட்டண விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. அரசே வாய் திறக்காத போது தங்களுக்கு எதுக்கு வம்பு என அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
இதனால் தனியார் பள்ளிகள் துணிச்சலுடன் கட்டணக் கொள்ளை நடத்தி வருகின்றன. இந்த நிலையை மாற்ற, அரசு தனது மெளனத்தைக் கலைத்து இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் அப்பாவி பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications