சட்டசபை நாளை கூடுகிறது-2011-12 பட்ஜெட் தாக்கல்

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுப்பது உள்ளிட்டவை குறித்த முக்கிய அறிவிப்புகள் இதில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நில அபகரிப்பு தொடர்பாக புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், இலவச லேப்டாப் திட்டம், இலவச மிக்சி கிரைண்டர் மின்விசிறித் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம்.
அதன் பின்னர் இந்தத் திட்டங்கள் முழு வீச்சில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் கோபத்தில் திமுக
இதற்கிடையே, இந்த கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நில மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் பெருமளவிலான திமுகவினர் கைதாகியுள்ளனர். தொடர்ந்து கைதாகி வருகின்றனர். இந்த விவகாரத்தை சட்டசபையில் திமுக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சமச்சீர் கல்வித் திட்டப் பிரச்சினையும் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் அவர்களும் திமுகவுடன் இணைந்து குரல் கொடுக்கலாம்.
பட்ஜெட் மீதான விவாதம் ஒருவார காலம் நடைபெறும். அதன் பின்னர் வரும் சுதந்திர தினம் உள்ளிட்ட விடுமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் சபை கூடி விவாதத்தைத் தொடரும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஒரே இடத்தில் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் என்று திமுக விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் திமுகவினர் அமர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications