பயணிகளுக்கு சோகம்-நிர்வாகத்திற்கு லாபம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் இன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. லாபமும் பார்க்க முடியாமல், பயணிகளையும் திருப்திபடுத்த முடியாமல் திணறுகிறது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் விதமாகவும், அன்டை மாநிலங்களை இணைக்கும் விதமாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் செயல்படுகிறது. இது சுமார் 25 பணிமனைகள், ஆயிரத்து 500 பேருந்துகள், பல்லாயிரம் தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது.
திமுக ஆட்சியில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நவீனமயமாக்கப்பட்டது. பேருந்துகள் 36 இருக்கைகள் கொண்டதாக இயக்கப்பட்டன. இது தவிர புதிய பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இத்தனை செய்தும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் முன்னேற்றம் அடைய முடியவில்லை. அதே சமயம் தனியார் வைத்து நடத்தும் ஆம்னி பேருந்துகள் அசுர வளர்ச்சி அடைந்தன.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் பல்வேறு குளறுபடிகள், ஆளுங்கட்சி தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஒத்துழையாமையால் முன்னேற்றம் அடைய முடியவில்லை. பல கிளை மேலாளர்கள் தங்களை அரசியல்வாதிகளாக நினைத்துக் கொண்டு எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுடன் வலம் வந்தனர். இதனால் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய போக்குவரத்துக் கழகம் திசை மாறி நஷ்டத்தை நோக்கிச் சென்றதுடன், போதிய பராமரிப்பு இல்லாததால் பயணிகளின் அதிருப்தியையும் சந்திக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அரசு விரைவுப் பேருந்துகளை முழுமையாக மாற்றியமைக்க தொடங்கிவிட்டனர்.
தற்போது அதிகபட்சம் 36 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் மட்டுமே ஆயிரத்து 500-க்கும் மேல் இயங்கி வருகிறது. இப்பேருந்துகளை புதிதாக மாற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இது தவிர புதிதாக இயக்கப்படவிருக்கும் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கைகளை அதிகரிக்கத் தொடங்கியுளளனர்.
ஒரு பேருந்துக்கு கூடுதலாக 10 இருக்கைகள் பொருத்தினால் ஒரு ட்ரிப்புக்கு குறைந்த பட்சம் ரூ.6 ஆயிரம் லாபம் கிடைக்கும். இதனால் தான் இருக்கைகளை அதிகரித்து வருகின்றனர். முதல் கட்டமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை-திருப்பதி இடையேயான புதிய பேருந்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அரசு பேருந்துகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்கக் காரணமே டோல்கேட் வசூல் முறை தான் (சுரங்க வரி). ஒரு நாளைக்கு ரூ. 600 முதல் 2 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டியுள்ளது. சுங்க வரி வசூலை தனியார் வசம் ஒப்படைப்பதால் அரசுப் பேருந்துகளுக்கு மாதம் ஒன்றுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
இதனை அரசு ஏற்று நடத்தினால் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இருந்து லாபத்தை நோக்கி பயணிக்கலாம். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட அனுமதி வழங்கியபோது, அக்கிராம சாலைகளை சீர் செய்யும் பொறுப்பும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அதே போன்று தற்போதும் செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.
சில ஓட்டுனர்கள் கூறும்போது, தனியார் பேருந்தில் 56 சீட் இருந்தாலும் பயணிகளுக்கு சௌகரியம் இருக்கும். பயண களைப்பு தெரியாது. அவர்கள் பேருந்தில் 2 சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.
நம் பேருந்துகளில் 1 சிலிண்டர் தான் உள்ளது. 36 சீட்கள் தான் பயணிகளுக்கு நல்லது. இருக்கைகளை அதிகப்படுத்தினால் ஒழுங்காக பராமரிக்க வேண்டும். அது இங்கு அறவே கிடையாது. பயணிகள் சொகுசாக பயணிக்க முடியாது.
இருக்கைகளை 36-ல் இருந்து 46 ஆக உயர்த்துவதால் நிர்வாகத்திற்கு லாபம் கிடைக்கும். அது வரவேற்கக் கூடியது. ஆனால் அதிகாரிகள் பயணிகள் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.
அவ்வாறு செயல்பட்டால் தான் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் லாபகரமாக இயங்க முடியும். இல்லை என்றால் மீண்டும் நஷ்டத்தை நோக்கித் தான் செல்லும் என்றனர்.












Click it and Unblock the Notifications