டன்லப் ஆலை விவகாரத்தில் முதல்வர் தலையிட சி.பி.எம். கோரிக்கை
திருவள்ளூர்: அம்பத்தூரில் உள்ள டன்லப் ஆலையை முழுமையாக இயக்க முதல்வர் ஜெயலலிதகா தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
திருவள்ளுவர் மாவட்டம், அம்பத்தூரில் உள்ள டன்லப் தொழிற்சாலை கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. சமீபகாலமாக தொழிற்சாலையில் தொழிலாளர் நலனுக்கும், தமிழக தொழில்துறை வளர்ச்சிக்கும் எதிரான சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த 1959ல் துவங்கப்பட்ட டன்லப் ஆலை டிரக், லாரி, பஸ், சைக்கிள் டயர் களை உற்பத்தி செய்தது. டன்லப் ஆலை சிறப்பாக செயல்பட அப்போதைய தமிழக அரசு 26.03 ஏக்கர் நிலம் வழங்கியது. மேலும், அம்பத்தூரில் 65.14 ஏக்கர் நிலமும், அத்திப்பட்டு கிராமத்தில் 52.28 ஏக்கர் நிலமும், சைதை பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் 6.24 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.
தனியார் நிர்வாகத்திடம் இருந்து வாங்கிய 1.01 ஏக்கர் நிலம் மற்றும் மாநில அரசு மூலம் வழங்கப்பட்ட நிலங்கள் என அனைத்துமே தொழில் பயன்பாடு மற்றும் ஆலை விரிவாக்கத்திற்காக வழங்கப்பட்டவை.
ஆனால், நிர்வாகம் எடுத்த தவறான முடிவுகள் மற்றும் குடும்ப பிரச்சனைகளால் கடந்த 15 ஆண்டுகளாக தொழிற்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் அதிகம் தொழிலாளர் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். 2500 தொழிலாளர்கள் பணிபுரிந்த இந்த ஆலையில் தற்போது 530க்கும் குறைவான தொழிலாளர்களே பணியில் உள்ளனர். இதிலும், 200 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகின்றது.
உற்பத்தி அதிகரிப்பிற்கான சூழல், ஆர்டர்கள் இருந்தும் அவை புறம் தள்ளப்படுகிறது. தொடர்ந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான கிராஜூவிட்டி, பி.எப். ஆகியவை வழங்கப்படுவதில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, டன்லப் ஆலைக்கு தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிலங்களை சூறையாட முயற்சிகள் நடந்து வருகிறது.
நலிவடைந்த ஆலைக்கான மத்திய அரசு நிறுவனத்தில் அனுமதி பெற்று 60 ஏக்கர் நிலம் 2004 ஜூனில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் 2009 ஜனவரி 20ம் தேதியன்று வழங்கிய தீர்ப்பில் மாநில அரசே இந்த நிலங்களை கைப்பற்ற வேண்டும் என்றும், தொழிலாளர் நலத்துறை, தொழில் துறை, வருவாய்த்துறை இவை மூன்றும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே, பல நூறுபேர் பலன்பெறும் வகையில் உள்ள டன்லப் ஆலையின் பிரச்சனையில் தாங்கள் நேரிடையாக தலையீடு உடனடி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தி்ல் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications