டாக்டர்கள் 50 கிராமத்தினருக்கு இலவச மருத்துவம் அளிக்க அப்துல் கலாம் வேண்டுகோள்

திருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை பெல் பள்ளியில் தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சஙகத்தின் 59வது மாநில மாநாடு துவக்கவிழா நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்க தலைவர் காந்தையா தலைமை வகித்தார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை டாக்டர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
மாநாட்டை துவக்கி வைத்து கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியதாவது:
நமது நாட்டில் கண் மருத்துவம் சிறந்து விளங்குவதால் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. டாக்டர் வெங்கடசாமி உருவாக்கிய அரவிந்த் கண் மருத்துவமனை இன்று ஆலமரம் போல் வளர்ந்துள்ளது.
இந்த மருத்துவமனை 100 பேருக்கு மருத்துவம் அளித்தால் 70 பேருக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு கண் மருத்துவரும் ஒரு ஆண்டில் கிராமப்புறத்தை சேர்ந்த 50 பேருக்கு இலவச மருத்துவம் செய்ய உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கூடுதலாக 500 கண் பரிசோதனை மையங்களை தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கம் நிறுவ வேண்டும். கிராமப்புறங்களுக்கும் கண் மருத்துவ வசதியை எடுத்து செல்ல கண் பரிசோதனை மையங்கள், நடமாடும் கண் மருத்துவமனைகளை தோற்றுவிக்க வேண்டும். இந்தியாவில் திறமையான மருத்துவர்களும் தொழில் நுட்ப வசதிகளும் உள்ளன. வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் பல நாடுகளுடன் கைகோர்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாடு வளரும். உலகமும் நன்மை அடையும்.
இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.












Click it and Unblock the Notifications