2 ஜி தேதி மாறியதில் ஸ்வான் நிறுவனத்துக்கு தொடர்பில்லை! - வக்கீல் வாதம்
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்கான கடைசி தேதி ஸ்வான் நிறுவனத்துக்காக மாற்றப்பட்டது என்ற புகாரை மறுத்துள்ளார் அந்நிறுவனத்தின் வழக்கறிஞர்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறை கேடாக பலனடைந்த நிறுவனங்களின் பட்டியலில், ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதான தேதியை அப்போதைய தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா மாற்றி அமைத்தார். காலக்கெடுவை நீட்டிப்பதற்கு பதிலாக சுருக்கினார். மேலும் 45 நிமிடங்களில் வங்கி டி.டி. உத்தரவாத கடிதம் போன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் அவ்வாறு தாக்கல் செய்யும் நிறுவனங்ளுக்கு மட்டுமே ஸ்பெகட்ரம் உரிமமும் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
45 நிமிடங்களில் இவ்வளவு ஆவணங்களையும் தயார் செய்து, தாக்கல் செய்வது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.
ஆனால், ஸ்வான் டெலிகாம் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆவணங்களை தாக்கல் செய்து, உரிமங்களை பெற்றன. மேற்கண்ட நிபந்தனை விவரங்கள், ஸ்வான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டதால் இந்த நிறுவனங்கள் முறைகேடாக பலன் அடைந்தன என்று சி.பி.ஐ. விசாரணை அறிக்கையிலும், குற்றப்பத்திரிகையிலும் தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மீதான குற்றச்சாட்டில் விவாதம் நடைபெற்றது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் ஸ்வான் நிறுவன வக்கீல் அமித் தேசாய் வாதாடினார்.
அவர் கூறுகையில், "2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற விபரம் ஏற்கனவே ஆன்-லைனில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தான், ஸ்வான் டெலிகாம் நிறுவனம், தேவையான ஆவணங்களை தயார் செய்தது. ஆனால், விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் பற்றி எங்கள் நிறுவனத்துக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது தவறானது. இதில் ஸ்வான் நிறுவனத்துக்கு தொடர்பு இல்லை.
இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளது. சி.பி.ஐ. குற்றச்சாட்டு உண்மை எனில் 7 வட்டங்களுக்கான உரிமங்களை யுனிடெக் நிறுவனத்திடம் நாங்கள் இழக்க நேரிட்டது ஏன்? தேதியை மாற்றி அமைக்கும் முன்பே, எங்கள் நிறுவனம் தேவையான ஆவணங்களை தயார் செய்துவிட்டது. போட்டியிட்ட 122 நிறுவனங்களில், 78 நிறுவனங்கள், தேவையான ஆவணங்களை ஏற்கனவே தயாராக வைத்திருந்தன.
ஸ்வான் டெலிகாம் நிறுவனம் முறைகேடாக பலன் அடைந்தது என்பதற்கோ அல்லது முறை கேடுகளில் ஈடுபட்டது என்பதற்கான ஆதாரமோ எதுவும் காட்டப்பட வில்லை. சி.பி.ஐ.யின் கையிலும் ஆதாரம் கிடையாது. முனனோடி புலனாய்வு அமைப்பு என்பதால், சி.பி.ஐ. தெரிவிக்கும் குற்றச் சாட்டுகளை தவறுதலாக மற்றவர்கள் நம்பி விடுகின்றனர். இதனால் ஸ்வான் நிறுவனத்தின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications