பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க எம்.பிக்களுக்கு கீ.வீரமணி அழைப்பு
மதுரை: பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரணியில் திரளுமாறு திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி அழைப்பு விடுவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை:
மத்திய மனிதவள அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சரகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மசோதாவில், வடகிழக்கு மாநிலங்களில் ஓ.பி.சி., என்ற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளது.
அங்கே ஓ.பி.சி., பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் பிரிந்து சென்று விட்டதாக, மத்திய கல்வி அமைச்சகம் கருதுகிறதா? இது சரியான தகவலாக இருப்பின் கண்டனத்திற்குரியது.
சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது இந்தியா முழுவதற்கு சமம். இந்திய அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பது தவறான சட்ட விரோதமான நடவடிக்கை.
வடகிழக்கு மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டுவதால், அதைச் சரி செய்ய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அறவே நீக்கி விடுகிறார்கள். இது ஓர் ஆபத்தான ஆரம்பம். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
எனவே, இந்த விவகாரத்தில், சமூக நீதியில் நம்பிக்கை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன் வரிசையில் நின்று இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும், சமூகநீதிக்கான அனைத்து அமைப்புகளும் உடனே குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications