அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் 7 பேர் சுட்டுக் கொலை- கொலையாளியை போலீஸார் வீழ்த்தினர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் 7 பேர் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி போலீஸாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்றபோது அவனை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஓஹையோவில் உள்ள கோப்ளி டவுன்ஷிப் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து நகர போலீஸ் தலைவர் மைக்கேல் மியர் கூறுகையில், ஒரே வீட்டில் ஐந்து பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி, வெளியே வந்து மேலும் 2 பேரை சுட்டுக் கொன்றார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீஸாரையும் தாக்க முயலவே அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்ட்டவர்களில் ஒருவன் 11 வயது சிறுவன் ஆவான். இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது கொலையாளி 7 பேரை கொன்று குவித்து விட்டு தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தான். அவனைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது போலீஸாரை நோக்கி அந்த நபர் சுட்டான். இதையடுத்து போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இதில் அவன் கொல்லப்பட்டான்.
குடும்பச் சண்டை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிக்கும், கொலையானவர்களுக்கும் என்ன உறவு என்பதும் தெரியவில்லை.
சம்பவம் நடந்த கோப்ளி நகர மக்கள் தொகை 14,000 என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications