திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6வது அறை திறப்பு குறித்து தேவ பிரசன்னம் தொடங்கியது

திருவனந்தபுரத்தில் உள்ள மிகப் பழமையான பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள ரகசிய அறைகளைத் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக குழு ஒன்றையும் அது நியமித்தது. இந்தக் குழுவினர் மொத்தம் உள்ள 6 அறைகளில் 5 அறைகளைத் திறந்து ஆய்வை முடித்துள்ளனர். இதில் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய, அரிய வகை நகைகள் உள்ளிட்ட பொக்கிஷக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் 6வது அறையைத் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் கதவைத் திறக்க முடியவில்லை. பூட்டு மிகப் பலமாக இருந்ததால் திறப்பு பலன் தரவில்லை. மேலும், அறைக் கதவில் பாம்பு படம் வரையப்பட்டிருப்பதால் அதைத் திறந்தால் கேடு விளையும் என்று கோவில் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தேவ பிரசன்னம் கேட்க மன்னர் மார்த்தாண்ட வர்மா உத்தரவிட்டார். தேவ பிரசன்னம் என்பது கடவுளிடம் உத்தரவு கேட்பதாகவும். தேவ பிரசன்னத்தில் உத்தரவு கிடைத்தால் கதவைத் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று தேவ பிரசன்னம் கேட்கும் நிகழ்ச்சி தொடங்கியது. 3 நாட்கள் இது நடைபெறும். கோவில் தந்திரி பரமேஸ்வரன் தலைமையில் பெங்களூரிலிருந்து வந்துள்ள ஜோதிடர்கள் குழுவும் தேவ பிரசன்னத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் தாராளமாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவ பிரசன்னத்தில் என்ன உத்தரவு வரப் போகிறது என்பதை அறிய கேரள மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகும் ஆவலுடன் காத்துள்ளது.












Click it and Unblock the Notifications