திருப்பூர் மேயர் செல்வராஜ் மீது நிலமோசடி வழக்கு பதிவு- கைதாகிறார்
திருப்பூர்: ஈரோடு மேயரைத் தொடர்ந்து தற்போது திருப்பூர் திமுக மேயரும் நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் இவரும் கைதாகவுள்ளார்.
ஈரோடு மாநகராட்சியின் திமுக மேயர் சமீபத்தில் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜாவுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருப்பூர் மேயரும் சிக்குகிறார்.
கேரளா மாநிலம் தலசேரியை சேர்ந்த தினேஷ் காணி என்பவர் திருப்பூர் இந்தியன் வங்கியில் 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இதற்கு ஜாமீனாக திருப்பூர், காந்தி நகர் இ.பி.காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சாமாத்தாளும் (53), பாத்திமா நகரை சேர்ந்த ஜெகதாம்பாளும் தங்கள் சொத்து பத்திரங்களை வழங்கினர். ஆனால் தினேஷ்காணி கடன், வட்டியை திரும்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் உத்தரவாதம் கொடுத்த சாமாத்தாள், ஜெகதாம்பாளுக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து இருவரும் வழக்கு தொடுத்தனர். தினேஷ்காணியின் கம்பெனியில் உள்ள அசையும் சொத்துகளை மட்டும் ஜப்தி செய்ய கோர்ட் அனுமதி அளித்தது.
இதையறிந்த திருப்பூர் மேயர் செல்வராஜ் மற்றும் சரவணகுமார், ரகுபதி, ஜெயக்குமார், சுப்பிரமணி ஆகியோர் சாமாத்தாள் வீட்டுக்கு சென்று, வங்கி பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் தருகிறேன், அந்த நிலத்தை சரவணகுமார், ரகுபதி பெயரில் கிரயம் செய்து கொடுங்கள் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சாமாத்தாள், திருப்பூர் மேயர் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து தனது 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். இதற்காக வங்கி அதிகாரி ஒருவர் உதவியுடன் ரகுபதிக்கு பெயர் மாற்றம் செய்துள்ளதாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு மையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து, திருப்பூர் மேயர் செல்வராஜ் மற்றும் சரவணகுமார், ரகுபதி, ஜெயக்குமார், சுப்பிரமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் செல்வராஜ் விரைவில் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications