கடற்படை சீல் படையினரைக் கொன்ற தலிபான்களை குண்டு வீசிக் கொன்றது அமெரிக்கா
காபூல்: ஒசாமா பின்லேடனைக் கொன்ற அமெரிக்கக் கடற்படையின் 6வது சீல் பிரிவு வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டரை தாக்கி அதில் இருந்த 30க்கும் மேற்பட்டோரைக் கொன்ற தலிபான் தீவிரவாதிகளை குண்டு வீசிக் கொன்று விட்டதாக அமெரிக்கப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் முக்கியப் பிரமுகர்கள் யாரேனும் உள்ளனரா என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. கிட்டத்தட்ட 25 தலிபான்கள் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அந்தப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்கப் படையினர் போர் விமானம் மூலம் உள்ளே பறந்து வந்து தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க கடற்படை சீல் படையினர் பயணித்த ஹெலிகாப்டரை ராக்கெட் லாஞ்சர் மூலம் தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இதில் 30க்கும் மேற்பட்ட கடற்படை சீல் பிரிவினர் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் பின்லேடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தலிபான்களை ஏவுகணைத் தாக்குதல் மூலம் வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கப் படையினர் கூறியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஒரு நிலையைக் குறி வைத்து நடந்த தாக்குதலின்போது 25க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்றும் அமெரிக்கப் படையினர் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்தில் 25க்கும் மேற்பட்ட உடல்களைப் பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications