திசையன்விளையில் திருட்டு சிடி விற்ற 4 பேர் கைது: 5200 சிடிக்கள் பறிமுதல்
நெல்லை: திசையன்விளை சிடி சென்டர்களில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 ஆயிரத்து 200 திருட்டு சிடிக்கள் சிக்கின. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திசையன்விளையில் திருட்டு சிடி விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஏடிஜிபி சேகர் உத்தரவி்ன் பேரில் ஐஜி கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் டிஐஜி ஜான் நிக்கல்சன், சென்னை சிபிசிஐடி, திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு எஸ்பி விஜயகுமாரி, சென்னை இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் திசையன்விளையில் உள்ள சிடி கடைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது திருட்டு சிடிக்கள் விற்ற கார்த்திக், வேல்குமார், முத்து, முத்துகுமார் ஆகிய 4 பேரையும கைது செய்ததோடு, சிடி கடைகளில் இருந்த 5 ஆயிரத்து 200 சிடிக்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
திருட்டு சிடி தயாரிப்பதோ அல்லது அதனை விற்பதோ சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருட்டு சிடிக்கள் விற்பவர்கள் அல்லது தயாரிப்பவர்கள் பற்றிய தகவல்களை 97898-43111 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications