குடிக்கு அடிமையாகி, நடைபாதையில் வாழ்க்கை நடத்தும் ஐ.ஏ.எஸ் அதிகாரி
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபாதையில் கிடந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, தனது மகனை கண்டுபிடித்த அவரது தாய் கண்ணீர் விட்டுக் கதறினார்.
புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையில் நீண்ட நாட்களாக ஒருவர் அமர்ந்து கொண்டு, எப்போதும் மது அருந்திக் கொண்டிருந்தார். நன்கு படித்தவர் போல காணப்பட்ட அவர், நடைபாதையில் அமர்ந்திருப்பது குறித்து சிலர் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், எனக்கு நிம்மதி கிடைக்க, எப்போதும் குடித்து கொண்டே இருக்கிறேன். டெல்லியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த நான், கொல்கத்தாவை சேர்ந்தவன், என ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
சில நாட்களில் அந்த நபரை தேடி புதுவைக்கு வந்த ஒரு பெண்ணிடம் விசாரித்தபோது, "நடைபாதையில் இருப்பது என் மகன் சக்கரவர்த்தி. டெல்லியில் ஐ.ஏ.எஸ். படித்து பல பட்டங்களைப் பெற்ற அவனது குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் குடிப் பழக்கத்திற்கு அடிமையானான். அதை நாங்கள் கண்டித்ததால், எங்களிடம் கோபித்துக் கொண்டு இங்கே வந்துவிட்டான்.
கொல்கத்தாவில் வசதியாக வாழ்ந்து வரும் எங்கள் குடும்பத்தில் சக்கரவர்த்தி மட்டும் இப்படி நடைபாதையில் அமர்ந்து குடித்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. மகனுக்கு தகுந்த சிகிச்சை அளித்து, திரும்ப வீட்டிற்கு அழைத்து செல்ல தீர்மானித்துள்ளேன். அதற்காக இங்கேயே சில நாட்கள் தங்க வீடு எடுத்து உள்ளேன்", என்றார்.
புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தாலும், படிப்புகள் ஏராளம் படித்தாலும், மனித வாழ்க்கையில் அர்த்தமளிக்கும் மண வாழ்க்கை கசந்தால் எல்லாம் திசைமாறி போகும் என்பது சக்கரவர்த்தியின் வாழ்க்கையில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications