பத்மநாபசுவாமி கோயில் அறை திறப்பை எதிர்த்து வழக்கு தொடர்கிறது மன்னர் குடும்பம்!
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 வது ரகசிய அறையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்துக்கு போக முடிவு செய்துள்ளது மன்னர் குடும்பம்.
பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளைத் திறந்து பொற்குவியலை மதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 5 அறைகள் திறக்கப்பட்டன. அவற்றில் ரூ. 5 லட்சம் கோடி பொக்கிஷங்கள் இருந்தன.
இதைத்தொடர்ந்து கடைசியாக பி நில வறையை திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் மன்னர் குடும்பம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அறையை திறந்தால் நாட்டுக்கு பேராபத்து ஏற்படும் என்று எச்சரித்தனர். இதனால் பி அறையை திறப்பதற்கு முன்பு தேவபிரசன்னம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை 4 நாட்கள் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யக் கூடாது என்றும் பி அறையை திறப்பவர்களின் வம்சமே விஷஜந்துகள் கடித்து அழிந்து விடும் என்றும் ஜோதிடர்கள் எச்சரித்தனர்.
இதற்கிடையே உச்சநீதிமன்றம் அமைத்துள்ள தேசிய அருங்காட்சியக இயக்குனர் ஆனந்தபோஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட மதிப்பீட்டு குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் பொக்கிஷங்களை மதிப்பிடுவது பி நிலவறையை திறப்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மன்னர் குடும்பத்தின் கடைசி மன்னரான உத்திராடம் திருநாள் மார்த்தண்டவர்மா, ராமவர்மா ஆகியோர் பி நிலவறையை திறப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பொற்குவியலை கணக்கிடவும் அவற்றை காட்சி பொருளாக வைப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தேவபிரசன்னத்தில் ஜோதிடர்கள் கூறியப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications