உடல் அசைவு மூலம் துரைமுருகன் கிண்டல் செய்கிறார்!!: சட்டசபையில் அமைச்சர் புகார்

Subscribe to Oneindia Tamil

Duraimurugan
சென்னை: பாடி லாங்குவேஜ் மூலம் தன்னை திமுக உறுப்பினர் துரைமுருகன் கேலியும், கிண்டலும் செய்வதாக சபாநாயகர் ஜெயக்குமாரிடம் அமைச்சர் கே.பி.முனுசாமி புகார் கூறியதால் தமிழக சட்டசபையில் இன்று பரபரப்பு நிலவியது.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே சூடான விவாதம் நடந்தது. இதனால் பரபரப்பு நிலவியது. இறுதியில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தி வெளியேறினர்.

அதிமுக உறுப்பினர் திருச்சி மனோகரன் துணை கேள்வி ஒன்றை எழுப்பி பேசினார். கடந்த ஆட்சியில் சட்ட திட்டங்கள் குறித்து அவர் பேச முயன்றபோது, திமுக உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். கேள்வி நேரத்தின்போது குற்றச்சாட்டுக்களைக் கூறக் கூடாது என்று ஆட்சேபித்தனர்.

இதையடுத்து திமுகவினரை அமருமாறு சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். பின்னர் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து, 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் திமுகவினர் எங்கள் மீது எந்த அளவுக்கு குற்றச்சாட்டு கூறி பேசினார்களோ அப்படி எங்கள் உறுப்பினர் பேசவில்லை என்றறார்.

அந்த சமயத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி எழுந்து திமுக சட்டமன்ற கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தன்னுடைய உடல்மொழியால் அருவெறுக்கத்தக்க வகையில் கேலியும், கிண்டலும் செய்து கொண்டிருக்கிறார். இதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கும் திமுக உறுப்பினர்கள் எழுந்து ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்களுக்குப் போட்டியாக அதிமுக உறுப்பினர்களும் எழுந்து குரல் கொடுத்தனர். இதனால் அமளி நிலவியது.

அப்போது பேசிய சபாநாயகர் ஜெயக்குமார், அவையை மதிக்கின்ற வகையில் துரைமுருகன் நடந்து கொள்ள வேண்டும். அமைச்சர் கூறியது போல அவர் தவறாக நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றார்.

அதற்குப் பதிலளித்த துரைமுருகன், நான் எதுவுமே பேசவில்லை. அமைதியாகத்தான் உட்கார்ந்திருக்கிறேன் என்றார்.

அப்போது எழுந்த அமைச்சர் முனுசாமி, நக்கலாக பார்ப்பது, கேவலமாக சிரிப்பது என்று உடல்மொழி மூலம் ஒரு மூத்த உறுப்பினர் செயல்படுவது இந்த அவைக்கு அழகா? என்றார்.

அந்த சமயத்தில் எழுந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ச சரத்குமார், அவர்களுடைய தலைவரே இப்படித்தான் நடந்து கொள்வார். எனவே தலைவரின் வழியில்தான் அவர்கள் நடப்பார்கள் என்றதும் திமுகவினர் கோபத்துடன் எழுந்து ஆட்சேபித்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்க சட்டமன்ற திமுக தலைவர் ஸ்டாலினும், துரைமுருகனும் முயன்றனர். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

அப்போது எழுந்த அதிமுக உறுப்பினர் பா. வளர்மதி ஆவேசமாக பேசினார். அவர் கூறுகையில், துரைமுருகன் இந்த அவையின் நியாயத்தை பற்றியும், தர்மத்தை பற்றியும் பேசுவது சரியல்ல. இதே சபையில் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவருடைய புடவையை பிடித்து இழுத்த துச்சாதனக் கூட்டம் அவை நடவடிக்கையின் நியாயத்தை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்று ஆவேசமாக பேசினார்.

இந்த நிலையில் திமுகவினர் வெளிநடப்புச் செய்வதாக கூறி வெளியேறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+