Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை ராம்லீலாவை விட்டுப் போக மாட்டேன்- அன்னா

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: கடந்த 3 நாட்களாக திஹார் சிறையில் இருந்த அன்னா ஹஸாரே இன்று வெளியே வந்தார். மக்கள் புடை சூழ ராம்லீலா மைதானத்தை அடைந்த அவர் போராட்டத்தைத் தொடங்கினார். ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்று அமல்படுத்தும் வரை ராம் லீலா மைதானத்தை விட்டு போகப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார்.

இன்று பிற்பகல் 12 மணியளவில் திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த ஹஸாரேவை வாசலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ஆதரவாளர்களும் உற்சாகக் குரல் கொடுத்து வரவேற்றனர். அவர்களிடையே சிறிது நேரம் மைக் மூலம் பேசினார் ஹஸாரே.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவை ஊழல்வாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் வரை நாம் அயராமல் பாடுபடுவோம், போராடுவோம் என்றார் அன்னா.

டிரக்கில் ஊர்வலம்

பின்னர் அவர் அங்கிருந்து ஒரு டிரக் மூலம் கிளம்பினார். வேன் மீது தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி காணப்பட்ட அன்னாவை நோக்கி ஆதரவாளர்கள் உணர்ச்சி பொங்க கோஷமிட்டனர். பின்னர் அந்த டிரக்கில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் ஹஸாரே. வழியெங்கும் கூடியிருந்த ஆதரவாளர்கள் அன்னாவுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்தனர்.

பலத்த மழை பெய்து வந்த போதிலும் மகக்கள் அதைப் பொருட்படுத்தாமல் அன்னாவுடன் ஊர்வலமாக சென்றனர். எழுச்சி பொங்க அன்னாவின் டிரக்கைச் சுற்றிலும், பின் தொடர்ந்தும் மக்கள் அலையென வந்ததைப் பார்த்தபோது உணர்ச்சிகரமாக இருந்தது.

மாயாபுரி வரை ஊர்வலமாக வந்த ஹஸாரே பின்னர் அங்கிருந்து ராஜ்காட்டுக்குச் சென்றார். காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு இந்தியா கேட்டுக்கு வந்தார் ஹஸாரே.

அதன் பின்னர் ராம்லீலா மைதானத்தை வந்தடைந்தார் ஹஸாரே. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஹஸாரேவை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களிடையே உற்சாகமாக தேசியக்கொடியைப் பிடித்து ஆட்டி பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டார் ஹஸாரே.

பின்னர் ஆதரவாளர்களிடையே அவர் பேசினார். கொட்டும் மழையில் நனைந்தபடி ஹஸாரே பேசினார்.

ஹஸாரே பேசுகையில், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தொடங்கி விட்டது. நாட்டைப் பீடித்துள்ள ஊழலை விரட்டும் வரை நாம் ஓயக் கூடாது. தொடர்ந்து போராட வேண்டும்.

ஒட்டுமொத்த நாடும் முற்றிலும் மாற வேண்டும். சாதாரண மக்களுக்காக நாம் இன்று அமைதி வழியில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம். அந்த இலக்கை அடையும் வரை நாம் போராடுவோம்.

இந்த நாட்டின் மிகப் பெரிய பலமே இளைஞர்கள்தான். அவர்கள் விழித்தெழுந்தால் ஊழலை எளிதில் விரட்டலாம்.

கடந்த நான்கு நாட்களில் நான்கு மூன்று கிலோ எடை குறைந்து விட்டேன். நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறேன். இருந்தாலும் எனது தெம்பு போய் விடவில்லை.உங்களது ஆதரவுதான் எனது பலமே. நாட்டை களவாடி வரும் ஊழல்வாதிகளுக்கு இனியும் நாம் இடம் தரக் கூடாது.

நாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. ஆனால், நமது லட்சியத்தை அடையும் வரை போராடப் போகிறோம். ஜன் லோக்பால் மசோதாவை அரசு ஏற்கும் வரை நான் இந்த இடத்தை விட்டு அசையப் போவதில்லை என்றார் அன்னா.

அன்னா ஹஸாரேவின் போராட்டத்தில் மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது. அன்னா ஹஸாரே திஹார் சிறையிலிருந்து ஊர்வலமாக வந்த மாயாபுரி, பின்னர் சென்ற ராஜ்காட், இந்தியா கேட் மற்றும் அங்கிருந்து வந்த ராம்லீலா மைதானம் என வரும் வழியெல்லாம் மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. இதனால் கிட்டத்தட்ட டெல்லியே ஸ்தம்பித்தது என்று கூறும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் அன்னா ஹஸாரேவின் ஆதரவாளர்கள் நிரம்பியிருந்தனர்.

அன்னாவின் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்தது. இதை மீறப் போவதாக அவர் கூறியதைத் தொடர்ந்து கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். இதனால் ஆவேசமடைந்த அன்னா சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அவருக்கு ஆதரவாக டெல்லியிலும், நாடாளுமன்றத்திலும், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து மத்திய அரசு பணிந்தது. அன்னாவை விடுதலை செய்தது.

இருப்பினும் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெளியே வர மாட்டேன் என்று அன்னா கூறி விட்டார். இதையடுத்து டெல்லி காவல்துறை, அன்னாவின் ஆதரவாளர்களோடு பேச்சு நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 15 நாட்கள் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியது. மேலும் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏற்பதாக அன்னா தரப்பு கூறி உத்தரவாதம் வழங்கி கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளது.

அந்த ஒப்பந்தத்தில், எனது ஆதரவாளர்கள் யாரேனும் விதிமுறைகளை மீறினால் என் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று அன்னா ஹஸாரேவே உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. 15 நாட்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், பின்னர் தேவைப்பட்டால் நாட்களை நீடித்துக் கொள்ள முடியும் என்று அன்னா தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+