தீபாவளி.. தென் மாவட்ட ரயில்களில் ஒரு இடம் கூட காலி இல்லை!
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. அவற்றில் ஒரு இடம் கூட காலியாக இல்லை. இதையடுத்து சிறப்பு ரயில்களை இயக்கினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
வரும் அக்டோர் 26ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அக்டோபர் 20ம் தேதி முதல் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எல்லா ரயில்களும் நிரம்பிவிட்டன.
அதே போல 27ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களிலும், முன்பதிவு முடிந்து விட்டது.
இதனால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் தென்னக ரயில்வேவுக்கு கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளன. அதை தீபாவளிக்கு முதல் நாள் ராத்தியில் அறிவிக்காமல், முன் கூட்டியே அறிவித்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
செய்வார்களா அதிகாரிகள்?..
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தடம்புரண்ட புதுச்சேரி ரயில்:
இந் நிலையில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வந்த பயணிகள் ரயில் தடம்புரண்டது.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு நேற்றிரவு 9 மணிக்கு பாசஞ்சர் ரயில் சென்றது. இரவு 9.45 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின் பராமரிப்பு யார்டு பகுதிக்கு சென்றது.
8 பெட்டிகளுடன் சென்ற இந்த ரயில் பின்னோக்கி சென்றபோது அதன் 4, 5வது பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. விழுப்புரம் ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில்வே மீட்புப் படையினர் விரைந்து வந்து ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். ரயில் தடம் புரண்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications