ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
பாக்தாத்: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்கப் படைகள் கடந்த மே மாதம் 2-ம் தேதி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது அப்போத்தாபாத் இல்லத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. இந்த சம்பவத்திற்கு பழி வாங்கக் கிளம்பியுள்ளது அல் கொய்தா. தற்போது ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் அல் கொய்தா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்துவோம். அவை தற்கொலை தாக்குதல்களாகவும், ரோட்டோர குண்டு வெடிப்பாகவும், துப்பாக்கிச் சூடு போன்றவையாகவும் இருக்கலாம். அவை தவிர சத்தமில்லாமல் மிக அமைதியான முறையில் ஆயுத தாக்குதல்களும் நடத்தப்படலாம்.
இது ஈராக்கின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் நடைபெறும். நோன்பு மேற்கொள்ளும் புனித ரமலான் மாதத்தின் நடுவில் அதாவது ஆகஸ்டு மாதத்தில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 15-ம் தேதி ஈராக்கின் 7 மாகாணங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 70 பேர் பலியாகினர், 260 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது.
அல் கொய்தா தீவிரவாதிகளி்ன் இந்த மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications