தமிழகத்தில் வழக்கத்தைவிட 5% குறைவாகப் பெய்த மழை!

சட்டசபையில் இன்று வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் பி.தங்கமணி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு தினசரி வாழ்க்கையில் பெரிதும் உதவக்கூடிய மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்க உள்ளோம்.
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு 25 லட்சம் குடும்பங்களுக்கு இது வழங்கப்படும். மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யும்.
இந்தப் பொருட்களை நகரம் மற்றும் கிராம அளவில் வினியோகம் செய்யும் பொறுப்பு வருவாய் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இந்த பொருட்களை வினியோகம் செய்ய தாசில்தார் பொறுப்பாவார். வினியோகப் பணிகள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையிடுவார்.
இந்தத் திட்டத்தை செம்மையாக செயல்படுத்த ஒவ்வொரு கிராமத்திலும் வசிக்கும் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை வட்ட அளவில் பாதுகாப்பாக வைக்க சேமிப்பு கிடங்கு தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 69 ஆர்.டி.ஓ. பணியிடங்களும், 280 தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் பணியிடங்களும் காலியாக உள்ளன. இவைகளை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல் 3,011 வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களும் 4,559 கிராம நிர்வாகி அதிகாரி பணியிடங்களும், 701 கிராம உதவியாளர் பணியிடங்களும், 789 இதர பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 9,409 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 1-1-2011 முதல் 10-8-2011 வரை 290.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 5 சதவீதம் குறைவாகும்.
இந்த ஆண்டு 1 கோடி 60 லட்சம் சேலைகளும், 1 கோடியே 60 லட்சம் வேஷ்டிகளும் ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இதற்காக ரூ. 269 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
போலி ரேசன் கார்டு-தகவல் கொடுத்தால் கூடுதல் சன்மானம்:
இந் நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கடத்தும் சமூக விரோதிகள் மற்றும் போலி ரேஷன் கார்டுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சன்மானம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் புத்திசந்திரன் கூறியுள்ளார்.
சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர்,
அத்தியாவசியப் பொருட்களை கடத்தும் சமூக விரோதிகள் பற்றி அளிக்கப்படும் தகவல்கள், சமூக விரோதிகளைக் கைப்பற்றுவதில் முடிந்தால், தகவல் தரும் நபருக்கு வழங்கப்படும் சன்மானம், 500 ரூபாயிலிருந்து ரூ. 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். போலி ரேஷன்கார்டுகள் கண்டுபிடித்து களையப்பட்டால், தகவல் தரும் நபருக்கு வழங்கப்படும் சன்மானம் 200 ரூபாயிலிருந்து ரூ. 250 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காலி இடங்கள், பிற துறைக்கு சொந்தமான இடங்களில், மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கொள்ளளவு கொண்ட, கூடுதல் கிடங்குளை ரூ. 47.5 கோடி நபார்டு வங்கி கடன் நிதியுதவியுடனும், ரூ. 2.5 கோடி அரசு நிதியுதவியுடனும் கட்டப்படும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ரூ. 1.7 கோடி மதிப்பீட்டில், 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்றார்.
நெடுஞ்சாலை உணவகங்களுக்கு எச்சரிக்கை:
இந் நிலையில் நெடுஞ்சாலை உணவகங்களில் அதிக விலைக்கு உணவு பண்டங்கள் விற்கப்படுவதாக சட்டசபையில் உறுப்பினர்கள் புகார் கூறியதையடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்தார்,
அ.தி.மு.க. உறுப்பினர் காமராஜ் பேசுகையில், நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூட்டுறவு உணவகங்கள் நடத்தப்படுமா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நிதிப் பற்றாக்குறை காரணமாக நெடுஞ்சாலைகளில் கூட்டுறவு உணவகம் அமைக்கும் திட்டம் தற்போது இல்லை.
கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட சில சாலையோர உணவகங்கள் முன்தான் பஸ்களை நிறுத்தும் சூழ்நிலை இருந்தது. அந்த உணவகங்களில் ரூ.8.50 மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்கள் ரூ.23க்கு விற்கப்பட்டது.
இதுபோல் குளிர்பானங்களும் அதில் குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டன. தற்போது பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை விலைக்கே அவற்றை விற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தரமற்ற உணவுகளை அதிக விலைக்கு விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications